search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை போக்குவரத்து போலீஸ்"

    போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்தது. #ChennaiTrafficPolice
    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது சிலர் தகராறில் ஈடுபடுகிறார்கள்.

    இதேபோல் போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றன.

    வாகன ஓட்டிகள்- போலீசார் இடையே தகராறு சம்பவம் மற்றும் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த சென்னை காவல் துறை முடிவு செய்தது.

    இந்த திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ.1.50 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக 200 கேமராக்கள் வாங்கப்படுகின்றன.

    இந்த கேமராக்கள் தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. 120 டிகிரி கோணத்தில் காட்சிகளை பதிவு செய்ய முடியும்.


    கேமராக்கள் முதலில் இணைய தள வசதியின்றி அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் மினிசர்வர் உருவாக்கப்படுகிறது. இதன் பிரதான சர்வர் வேப்பேரியில் உள்ள போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும்.

    கேமராவில் பதிவாகும் காட்சிகள் மினி சர்வர்கள் மூலம் பிரதான சர்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்ட பிறகு கேமராவில் இருந்தே இணைய தளம் மூலம் பிரதான சர்வருக்கு காட்சிகளை அனுப்பப்படும். இந்த காட்சிகளை அதிகாரிகள் நேரிடையாகவே பார்க்க முடியும்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “வாகன சோதனையின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீசார் மீது லஞ்சப்புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தகராறு செய்பவர்களை கண்டறியவும் கேமரா பொருத்தப்படுகிறது.

    கேமராவை போலீசார் தன்னிசையாக ஆப்செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் வாங்குவதற்காக கேமராவை ஆப் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்படும்” என்றனர். #ChennaiTrafficPolice
    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrafficPolice
    சென்னை:

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் முறைப்படி அபராதம் விதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

    குறிப்பாக போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை வழிமறித்து நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காவல் துறையில் இது தீராத கறையாகவே படிந்துள்ளது.

    போக்குவரத்து போலீசாரின் இந்த முறைகேடான நடவடிக்கை காரணமாக பல இடங்களில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளன.

    இதனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து போலீசார் மீது படிந்துள்ள லஞ்ச புகார் கறையை போக்க சென்னை போலீஸ் அதிகாரிகள் கடந்த மே மாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பணம் வசூலிக்கும் முறைக்கு முடிவு கட்டினர். ரொக்கமில்லா பணபரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினர்.

    புதிய திட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியிடம் ரொக்கமாக பணம் வாங்க கூடாது என்றும் அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண் ஆகியோர் போக்குவரத்து போலீசாருக்கு சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தனர்.

    புதிய நடைமுறையின்படி வாகன ஓட்டிகளிடம் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பெரும் அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பே.டி.எம்., அஞ்சலகம், இ-சேவை மையம் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் இதனை பின்பற்றியே வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இந்த விதிமுறையை மீறி முறைகேடாக வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் அருண் அதனை கண்காணிப்பதற்கு தனிப்படைகள் அமைத்தார். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து போலீசார் பல இடங்களில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை மீறி லஞ்சமாக பொது மக்களிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு, ஆகியோர் கையும் களவுமாக கேமரா மூலமாக சிக்கியுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுக்குள்ளான சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, முருகன், இருதயராஜ், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அவர்கள் மீது விரைவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.

    இதற்கிடையே லஞ்ச புகாரில் போக்குவரத்து போலீசார் சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தென்னரசு, ஏட்டு வெங்கடாசலம், தண்டையார்பேட்டை போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேற்று முன்தினம் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை எல்லையம்மன் கோவில் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஏட்டு வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்துள்ளார். அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கி கொண்டு 1,800 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.200 லஞ்சமாக பெற்றது அம்பலமானது. இதனை தொடர்ந்து 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் இ-செலான் மூலம் ரூ.100 அபராதம் விதித்து விட்டு 200 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் பரவியுள்ளது.

    லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அடையாறு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் விபத்து வழக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பொறியில் சிக்கியது போல பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நடவடிக்கை தொடரும். எனவே போக்குவரத்து போலீசார் பொது மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
    ×